வணக்கம் அன்பு நெஞ்சங்களே, இந்த பதிவில் நம் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி விரதம் உருவானது எப்படி, அதை கடைப்பிடிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தால ஜங்காசுரனுடனும் (முரன்) அவன் புதல்வன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டு களைத்து ஒரு குகையில் அயர்ந்து இருக்கையில் (தூங்கிக்கொண்டிக்கையில்) விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தேவப் பெண்ணாக உறுவெடுத்து அசுரர்களை தனது ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது.
விஷ்ணு விழித்து விபரம் உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி என பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.
எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடை பிடித்தால் என்றும் நீங்காப் புகழுடன் பொருள் பெற்று சிறப்பாக வாழ்வோம். பரந்தாமனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்வில் ஏற்றம் நிச்சயம்.
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள். அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொராவது நாளாகும். மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது மிக முக்கியமானதாகும்.
ஏனெனில் மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டாலும் பாவங்கள் ஏதும் உண்டாவதில்லை. ஆனால் ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்கவிட்டால் கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும். பிரம்மன் படைத்த உயிர்களில் கொடூரமான பாவங்களையே அங்கங்களாக கொண்ட பாவ புருஷனும் ஒருவன்.
மக்களைப் பாவச்செயல்களில் செலுத்து கொடூரமான நரகத்தில் செலுத்துவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வேலை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார்.
அவர்களிடம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க, அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்கக லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாறி சொர்க லோகம் நிரம்பியது.
நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின என்பது ஐதீகம். இதனால் பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் கிருஷ்ணரிம் முறையிட அதற்கு பகவான் கிருஷ்ணர் ஏகாதசி அன்று தானியம், பருப்பு (அரிசி, தானியங்கள், பருப்புவகைகள், பயறுவகைகள், கடுகு,உளுந்து,தாளித்து மற்றும் காய்கறிகளில் பீன்ஸ், இட்லி,தோசை, சப்பாத்தி, புரி உப்புமா,அவரை, மொச்சைவகையறா) வகைகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரம் அளித்தார்.
ஆனால் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள்,பழங்கள்,பால், தயிர் போன்றவற்றை பகவான் கிருஷ்ணருக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசிக்கு முந்திய நாளான தசமி அன்று பகல் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.
விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைக்காது.
ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும்,செய்யகூடாததும்
ஏகாதசி விரதத்தின் போது பகவத்கீதை,பாகவதபுராணம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்க வேண்டும். அன்று முழுவதும் சொல், செயல், சிந்தனை பகவான் கிருஷ்ணரிலேயே ஈடுபடுத்தவும். ஏகாதசி அன்று சினிமா டிவி பார்ப்பது,பரமபதம் ஆடுவதும், வீண் பேச்சு பேச கூடாது.
பணக்காரராக மாற்றும் ஏகாதசி விரதம்
ஏகாதசி அன்று விரதம் இருந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் என்ற வளர் பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய் பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி.
ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் ``ஒன்று'' என்று பொருள். தசி என்றால் ``பத்து'' என்று அர்த்தம். ஏகாதசி என்றால் பதினொன்றும் நாள் என்று பொருள். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம்-5 மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்றுபடுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி.
மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி தான் மிகவும் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி என்பார்கள். ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.
இந்நன்னாளில் விரதம் இருப்போருக்கு திருமாலே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். ஏகாதசிக்கு முதல்நாள் தசமி அன்று பகலில் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும்.
ஏகாதசி தினத்தன்று முழுமையாக உணவு நீக்கி விரதம் இருத்தல் வேண்டும். கண் விழித்து திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிரத் திவ்யபிரபந்தம், நாராயணீயம், புருஷ சூக்தம், விஷ்ணுபதி பாராயணம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக