வணக்கம் அன்பர்களே ஆழ்வார்கள் பாடிய வைணவத் திருக்கோவில்கள் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவ்வாறு மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டில் 18 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தாமிரபரணியாற்றின் வடகரையிலும் தென்கரையிலும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஒன்பது வைணவத் தலங்கள் உள்ளன. இவை நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஸ்ரீவைகுண்டம் (சூரியன்), நத்தம் (சந்திரன்), திருப்புளியங்குடி (புதன்), இரட்டைத் திருப்பதி (ராகு- கேது), பெருங்குளம் (சனி), தென்திருப் பேரை (சுக்கிரன்), திருக்கோளூர் (செவ்வாய்), ஆழ்வார் திருநகரி (வியாழன்) ஆகிய தலங்களே அவை. நவகிரகங்களுடன் தொடர்புடை யதாகக் கருதப்படும் இந்த ஒன்பது தலங்களிலும் நவகிரகங்கள் அனைத்தும் பெருமாளின் காலடியில் இருப்பதால், தனியே நவகிரக சந்நிதி கிடையாது. பக்தர்கள் அவரவர் கிரக தோஷம் நீங்க நவ திருப்பதிகளுக்கு வந்து வணங்கி நல்வாழ்வு பெறுகின்றனர்.
இவற்றில் செவ்வாய்க்குரிய திருத்தலம் திருக்கோளூர் ஆகும். நவ திருப்பதிகளில் எட்டாவது தலமான இது குபேர ஸ்தலம் என்றும் அழைக் கப்படுகிறது. இத்தல மூர்த்தி நிக்ஷோப வித்தன் (வைத்தமாநிதிப் பெருமாள்) ஆவார். தனித்தனி சந்நிதிகளில் தாயார் குமுதவல்லி நாச்சியார், கோளூர்வல்லி நாச்சியார் உள்ளனர். வைத்த மாநிதிப் பெருமாள் ஸ்ரீகர விமானத்தின் கீழ், கிழக்கே திருமுக மண்டலத்துடன் புஜங்க சயனத்தில் குபேரனுக்கு பிரத்தியட்சமான கோலத்தில் காட்சி தருகிறார்.
வடதிசைக்கு அதிபதியான குபேரன் தீவிர சிவபக்தனாக இருந்தான். ஒருமுறை அவன் கயிலாயத்துக்கு சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது, உமா தேவியை அவன் தீய எண்ணத்துடன் பார்ப்பதை அறிந்த தேவி, நவநிதிகளும் அவனிடமிருந்து ஒழியவும், ஒரு கண் போகவும் சாபமிட்டாள். பார்வதியின் சாபத்தால் செய்வதறியாது திகைத்த அவன், தேவியிடம் மன்னிப்பு கேட்டு விமோசனம் வேண்ட, தாமிரபரணி யாற்றின் தென்கரையில் உள்ள க்ஷேத்திரத்தில், அவனது நவநிதிகளின் மேல் பகவான் சயனித்து அவற்றைப் பாதுகாத்து வருவதாகவும்; அங்கு சென்று அனந்த சயனரை அடிபணிந் தால் இழந்த செல்வங்கள் கிட்டும் என்றும் மொழிந்தாள்.
குபேரனும் பூலோகத்துக்கு வந்து திருக்கோளூரில் சாபவிமோசனம் பெற தவம் செய்து கொண்டிருந்த போது, தீர்த்தத்தில் மகாவிஷ்ணு நேரில் தோன்றி வைத்தமாநிதி என்ற திருப்பெயருடன் காட்சியளித்தார். குபேரனுக்கு பெருமாள் பிரத்தியட்ச மான தீர்த்தம் குபேர தீர்த்தம் எனப் படுகிறது.
நிதிகளை வைத்திருப்பவர் என்ற பொருள்படும் வைத்தமாநிதிப் பெருமாள் மரக்காலை (அளக்கப் பயன்படுத்தும் பொருள்) தலைக்கு வைத்து ஆதிசேஷன்மீது சயனத்தில் உள்ளார். இடது கையை உயர்த்தி இன்னும் வேறு எங்கும் செல்வம் உள்ளதா என்று அஞ்சனம் (மை) தடவிப் பார்க்கிறார். குபேரனும் ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாளைத் தொழுது, இழந்த செல்வங்களைப் பெற்று, மாசி மாதம் சுக்ல துவாதசி யில் பெருமாளைப் போற்றி வழிபட்டு தன் இருப்பிடம் அடைந்தான் என்பது வரலாறு. இந்நாளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவிக்கிடக்கிறது.
நம்மாழ்வாருக்கு அவர்தம் வாழ்நாளில் நிறைய பணிவிடைகள் புரிந்த மதுரகவியாழ் வார் இந்த திருக்கோளூர் திருத்தலத்தில் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாகத் தோன்றியவர். இவர் நம்மாழ்வாரையே கடவுளாகக் கருதி "கண் ணின்றுன் சிறுத்தாம்பு' என்ற பிரபந்தத்தை அருளியவர். மதுரகவியாழ்வாருக்கும் இத்தலப் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார்.
குறிப்பிடத்தக்க திருமால் பதியான இந்த திருக்கோளூர் வந்து வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல், வலிமை, வழக்குகளில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. செவ்வாய் தோஷம் நீக்கும் இத்தல வைத்தமாநிதிப் பெருமாளை ஏராளமான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
திருக்கோளூர் திருத்தலம் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், ஸ்ரீவைகுண்டத் திற்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 7.30 மணிக்குத் தொடங்கி, ஆழ்வார்திருநகரி, திருக்கோளூர், தென்திருப்பேரை, பெருங்குளம், இரட்டைத் திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற முறையில் சேவித்து வந்தால், மதியம் 1.00 மணிக்குள் அனைத்து திருத்தலங்களையும் சேவித்துப் பயனடையலாம். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக