உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 16 அக்டோபர், 2014

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியன்று எல்லோருக்கும் சாப்பிட்டுச் சாப்பிட்டு வாய் வலித்துப் போகும், வெடித்து வெடித்து கை காய்த்துப் போகும். அந்த அளவுக்கு பட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்து போயுள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் தீபாவளியன்று விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இங்கு பார்ப்போம்...
 அதிரசம் :
 
தமிழர்களின் 'தேசிய' உணவுகளில் ஒன்று இந்த அதிரசம். ஒவ்வொரு பண்டிகைக்கும் இதை தமிழர்கள் செய்வார்கள் என்றாலும் கூட தீபாவளியன்றுதான் இதற்கு தனி கவனிப்பு கிடைக்கும். அரிசி மாவு, வெல்லம், வெண்ணெய், ஏலக்காய் பொடி உள்ளட்டவற்றை கொண்டு செய்யப்படும் அதிரசம் படு தித்திப்பானது. அதிரசம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது பாகு தயாரிப்பில்தான். அது மட்டும் சரியாக வந்து விட்டால், அந்த அதிரசத்திற்கு இணை வேறு எதுவுமே இல்லை. உண்மையிலேயே அட்டகாசமான 'டிஷ்' இது. 
 
மைசூர் பாக் :
 
 தீபாவளி பலகாரங்களில் மைசூர் பாக்குக்கும் தனி இடம் உண்டு. இது இல்லாமல் எந்த தீபாவளி இனிப்பு வகையும் முழுமை பெறாது என்று கூறலாம். கர்நாடகத்தில் இது மிகவும் பாப்புலராக இருந்தாலும் நாடு முழுவதும் இது மக்களின் வாய்களில் புழங்கி வருவதால் இதை தேசிய இனிப்பு என்று கூட கூறலாம். மைசூர் பாக் என்பதுதான் இதன் ஒரிஜினல் பெயர். சில இடங்களில் இதை மைசூர் பா என்றும் கூறுகிறார்கள். தங்கக் கட்டி போல அழகான வடிவங்களில் இதைப் பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறும் என்பது மறைக்க முடியாத உண்மை. நாவுக்கும் இது மென்மை தரும் ஒரு அற்புதமான ஸ்வீட். 
 
ரசகுல்லா :
 
 வங்கத்து வனப்பான ஸ்வீட் ஐட்டம் இது. பெங்காலி ஸ்வீட் வகையாக இருந்தாலும் கூட இதுவும் நாடு முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு தித்திப்பான ஸ்வீட். வட்ட வடிவில் காணப்படும் ரசகுல்லா, சுவைக்க இனிமையானது. பெங்காலிகளின் ஸ்வீட்டாக இது கூறப்பட்டாலும், உண்மையில் இது உதயமானது ஒரிசாவில்தான் என்பது கூடுதல் செய்தி. 
 
கேரட் ஹல்வா :
 
 இப்போதெல்லாம் தமிழகத்து கல்யாணங்களில் இந்த கேரட் ஹல்வாவும் ஒரு முக்கிய பதார்த்தமாக இடம் பெற ஆரம்பித்துள்ளது. காரணம், இதன் சுவை அனைவரது நாக்குகளையும் வாரி சுருட்டிக் கொள்வதால். இந்தியாவின் பல பகுதிகளிலும் கேரட் ஹல்வா பிரபலமாக உள்ளது. இது செய்வதற்கு எளிதானது மட்டுமல்லாமல், அருமையான சுவையையும் கொண்டது என்பதால் சர்க்கரை வியாதியஸ்தர்களைத் தவிர மற்ற அனைவருமே இதை சட்டென்று பிடித்துக் கொள்வர். பார்த்ததுமே நாவில் எச்சில் ஊற வைக்கும் கேரட் ஹல்வா, இப்போது தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்களில் ஒன்றாக மாறி விட்டது. 
 
போளி அல்லது ஒபபட் :
 
 தமிழ்நாட்டு போளிதான் கர்நாடகத்தில் ஒப்பட் என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவிலும் கூட இது பிரபலமான இனிப்பு வகையாகும். போளியை சுவைக்காத தமிழர்கள் வாயே இருக்க முடியாது எனலாம். அந்த அளவுக்கு வாளிப்பான சுவையுடன் கூடியது போளி. சர்க்கரை போளி, தேங்காய் போளி, துவரம் பருப்பு போளி என இதிலும் பல வகைகளை போட்டுத் தாக்கி சாப்பிடுகின்றனர் நமது மக்கள். மஞ்சள் நிறத்தில் பார்க்கவே மங்களகரமாக இருக்கும் போளி தமிழர்களின் தவிர்க்க முடியாத ஒரு இனிப்பு வகையாகும். 
 
அஞ்சீர் கட்லெட்  :
 
இது ஜெய்ப்பூரில் பிரபலமானது. முந்திரிப் பருப்பில் செய்யப்படும் கட்லெட் வகை இது. இதை பெரும்பாலும் வீடுகளில் செய்ய மாட்டார்கள். மாறாக கடைகளில்தான் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். நீளமான சிலிண்டர் சைஸில் உள்ள இந்த கட்லெட், தீபாவளிக்கு விசேஷமாக விற்பனை செய்யப்படும், விரும்பி சாப்பிடப்படும் ஒரு ஐட்டமாகும். 
 
முந்திரி பர்பி :
 
 பர்பியை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் இந்த முந்திரி பர்பி மகா டேஸ்ட்டான ஒரு ஐட்டம். வைர வடிவிலான முந்திரி பர்பி தீபாவளிப் பண்டிகையின் ஒரு முக்கிய பலகாரம். இருந்தாலும் பிற பர்பி வகைகளுடன் ஒப்பிடும்போது இந்த முந்திரி பர்பி விலை சற்று அதிகம்தான் - காரணம் முந்திரியால் செய்யப்படுவதால். 
 
குஜியா  : 
 
ராஜஸ்தான் பக்கம் போனால் குஜியா சாப்பிடலாம். மைதா மாவு, கோதுமை மாவு, கோயா உள்ளிட்டவற்றால் இதை செய்கின்றனர். இது ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின்போது செய்யப்படும் பாரம்பரிய இனிப்பாகும். இந்த குஜியாவுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயர் உள்ளதாம். 
 
லட்டு  :
 
தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அம்சம் இந்த லட்டு. பல வகையான லட்டுக்களை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு லட்டும் சிறப்பானதுதான். இந்திய வீடுகளில் லட்டுக்கு தனி இடமே உண்டு. 
 
குலாப் ஜாமூன் :
 
 செய்வதற்கு மகா எளிதான ஒரு ஸ்வீட்தான் குலாப் ஜாமூன். இப்போதெல்லாம் ரெடிமேட் குலாப்ஜாமூன் கடைகளில் நிறையவே கிடைக்கிறது. இதனால் நினைத்தவுடன் செய்யக் கூடிய ஒரு இனிப்பு வகையாக குலாப்ஜாமூன் திகழ்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் என தெற்காசியா முழுவதுமே பிரபலமானது குலாப்ஜாமூன். 
 
இந்த பத்து வகை இனிப்புகள் மட்டும்தான் தீபாவளியன்று நமது வயிறுகளை அலங்கரிக்கும் என்பதில்லை. இதேபோல இன்னும் எத்தனையோ ஸ்வீட் வகைகள் உள்ளன. எத்தனை வகை இருந்தாலும், எத்தனை பதார்த்தங்களாக இருந்தாலும் பார்த்து சாப்பிடுவது நமக்கும் நல்லது, பண்டிகையை பரவசமாக கொண்டாடவும் உதவும்.
 
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...