உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

அஷ்டலெஷ்மிகள் பற்றிய விளக்கம்

வணக்கம் அன்பர்களே,  அனைவருக்கும் முதலில் 2012 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு நம் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய நம் சுந்தராஜ பெருமாள், சுந்தரவள்ளி தாயார் , கோதை நாயகி தாயார், கோவிந்த விநாயகர், காவல் தெய்வம் கருப்பசாமி, சப்பாணி சாமியை வேண்டிக்கொள்கிறேன். இந்த இனிய புத்தாண்டின் முதல் பதிவாக நம் தாயாரின் அஷ்டலெஷ்மிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. கஜலெஷ்மி:-

நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒருகரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ் தாமரை மலரில்வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும்பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலெஷ்மியின் திரு அம்சமாகும்.

2. ஆதிலெஷ்மி:-

ஆதிலெஷ்மி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்டபொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபயகரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலெஷ்மியே ஆவாள்.

3. சந்தானலெஷ்மி:-

எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லெஷ்மியின் திருஅம்சமாகும்.

4. தனலெஷ்மி:-

மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலெஷ்மி.

5. தானியலெஷ்மி:-

எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச் செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லெஷ்மியை வணங்குவோம்.

6. விஜயலெஷ்மி:-

உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலெஷ்மியின் இயல்பு ஆகும்.

7. வீரலெஷ்மி:-

எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில் ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலெஷ்மியை வணங்கி பேரருள் பெறுவோம்.

8. மஹாலெஷ்மி:-

தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலெஷ்மி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்.
நன்றி.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...